கடந்த சில மாதங்களாகவே பாங்க் பிஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. எனவே தற்போது போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் இந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
பிஓ தேர்வுகளில் பொதுவாக அப்ஜக்டிவ் முறை தேர்வு ஒரு தாளாகவும், விரிவாக விடையளிப்பது மற்றொரு தாளாகவும் கேட்கப்படுகிறது. அப்ஜக்டிவ் தாளில் பின்வரும் பகுதிகளில் இருந்து கேள்விகள் அமைகின்றன.
* டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் லாங்வேஜ்
* டெஸ்ட் ஆப் ரீசனிங்
* டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் ஆப்டிடியூட்
* டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ்
மிக அதிகமான கேள்விகள் பிஓ தேர்வுகளைப் பொறுத்த வரை ரீசனிங் பகுதியிலிருந்தே அமைகின்றன. அனைத்து பகுதிகளையும் நமது சராசரி இளைஞர்கள் கடினமாகவே உணருகின்றனர். பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெறுபவர்கள் தான் பிஓ தேர்வுகளில் அதிகம் வெற்றி பெறுகின்றனர். இப்படி வெற்றி பெறுபவர்களில் டில்லி, மும்பை போன்ற இடங்களிலிருந்து தான் அதிகம் பேர் வெற்றி பெற்று வந்தனர். ஆனால் சமீப காலமாக மதுரை போன்ற நகரங்களில் இயங்கும் ஒரு சில பயிற்சி நிறுவனங்களில் படிப்பவர்கள் அதிகமாக இது போன்ற பி.ஓ. தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஓ தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் தரப்படுவதால் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும். பிஓ தேர்வுகளில் வெற்றி பெற மிக முக்கியமான மற்றொரு டெக்னிக்காக நேரத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவதைக் குறிப்பிடலாம்.
ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2 கேள்விகளுக்கும் மேல் பதிலளிக்க வேண்டியிருப்பதால் மிக நன்றாக தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் முதலில் விடையளிப்பதும் எந்த ஒரு குறிப்பிட்ட கேள்வியிலும் அதிக நேரத்தைச் செலவிடாமலிருப்பதும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை. அன்றாடம் வீட்டில் அல்லது பயிற்சி மையத்தில் நேரம் குறித்துக் கொண்டு விடையளித்துப் பழகுவது இதற்கு உதவும்.